Tamilnadu

Amazon டெலிவரி வாகனத்தில் இருந்து லேப்டாப் திருட்டு.. கைவரிசை காட்டிய முன்னாள் ஊழியரை சிக்கவைத்த CCTV!

திருவள்ளூர் டோல்கேட் ஜே. ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் அன்புச்செல்வம். இவர் திருவள்ளூரில் இயங்கி வரும் அமேசான் பொருட்கள் டெலிவரி நிறுவனத்தில் டெலிவரிபாயாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் மினி வேனில் அமேசான் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நகர் முழுவதும் சென்று அதை டெலிவரி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1ம் தேதி அன்று வழக்கம் போல் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்று பிற்பகல் வரை டெலிவரி செய்துள்ளார். பின்னர் வாகனத்தை தனது வீட்டின் அருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து திருவள்ளூர் ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க சென்றபோது, வாகனத்தில் அதற்கான பார்சல் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு, திருவள்ளூர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரது வீட்டின் அருகே இருந்த 10 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி-களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து லேப்டாப்பை எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது.

பின்னர் அந்த நபரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்ததில், திருவள்ளூர் தலகாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சின்னா பாட்ஷா என்பது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே அமேசான் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்ததும், அங்கு ஊதிய பிரச்சனை காரணமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.

Also Read: புற்றுநோயால் சிறுவன் உயிரிழப்பு.. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட Chhello Show படக்குழு அதிர்ச்சி!