Tamilnadu

”காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம்”.. உருக்கமாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலி: நடந்தது என்ன?

சென்னை அடுத்த மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் ராஜா. இவரது மகள் ஏஞ்சல். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏஞ்சல் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில், 'தனுஷ் வேறொரு பெண்ணோடு பழகி வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும்' இருந்துள்ளது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஏஞ்சல், காதலன் தனுஷ் இடம் இது பற்றி கேட்டுள்ளார். அப்போது காதலனும் 'ஆமாம் நான் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறியுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் கடந்த இரண்டு நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் வீட்டிற்கு சென்ற ஏஞ்சல் தான் ஏமாற்றப்பட்டதை அவருடைய பெற்றோரிடம் தெரிவித்து நியாயம் கேட்டுள்ளார். 'இது மகனின் விருப்பம் நாங்கள் எதுவும் செய்ய முடியாது' என அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த ஏஞ்சல், யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு வீட்டிற்கு வந்த பெற்றோர் மகள் தூக்கிட்ட நிலையிலிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிறகு அங்கு வந்த போலிஸார் ஏஞ்சல் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலிஸார் விசாரணை நடத்தியதில், தற்கொலைக்கு முன்பு ஏஞ்சல் செல்போனில் எடுத்த வீடியோ ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில், "தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம். காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை . அதனால்தான் இந்த முடிவை நான் எடுக்கிறேன். இதற்காகத் தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம்" என கூறியுள்ளார்.

இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: அதிவேகத்தில் வந்த பைக்.. ஆயுத பூஜை கொண்டாட சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. போதை வாலிபர் அதிரடி கைது !