Tamilnadu

“செல்போனுக்கு வந்த SMS; சின்ன கல், பெத்த லாபம்” - ரூ.14 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்: நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை தாலுகா குந்துகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் நாகபூஷன் . இவர் கடந்த 23.6.2022 அன்று இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் தனியார் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால், ரூ.80 லட்சம் முன்பணம் கொடுக்கப்படும். மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் வாடகை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு நாகபூஷன் பேசி உள்ளார். அப்போது பாம்பே அலுவலகத்திலிருந்து பேசுகிறேன் என தெரிவித்து, அவர்கள் செல்போன் டவர் அமைப்பதற்காக சில நடைமுறைகள் உள்ளது என தெரிவித்துள்ளனர். இதற்கு சொத்து யார் பெயரில் உள்ளது. அவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவை தருமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு ஆசிரியரும் அவருடைய மனைவி பார்வதி பெயரில் உள்ள சிட்டா நகல் மற்றும் ஆவணங்களையும் அனுப்பி உள்ளார். இதையடுத்த மற்றொருவர் தொடர்பு கொண்டு உங்களுக்கு டவர் அமைப்பதற்கு ஆர்டர் ஆகியுள்ளது என தெரிவித்து ரூபாய் 12,000 செலவாகிறது. ஆனால் அதற்கு நீங்கள் 6000 மட்டும் அனுப்பினால் போதும் என தெரிவித்துள்ளார். இதை நம்பி அவரும் முதல் தவணையாக 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார்.

இதேபோல அடுத்தடுத்து வெவ்வேறு செல் எண்களில் இருந்து மர்ம ஆசாமிகள் தொடர்பு கொண்டு, தங்களுக்கு மெட்டீரியல் தயாராக உள்ளது. இதை நாங்கள் மூன்று லாரிகளில் எடுத்து வருகிறோம். இதற்கு உண்டான செலவு தொகையை, மற்றும் பிளைட்டில் வருவதற்கு உடனடியாக 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அவர்கள் கூறியபடி 3 வங்கிகளின் கணக்கிற்கு பல தவணைகளாக பணம் அனுப்பி உள்ளார். மேலும் போன் பே மூலம் பணம் செலுத்தி உள்ளார். இது போல் மூன்று நாட்களக்கு முன் வரை 14 லட்சத்து 26 ஆயிம் ரூபாய் நாகபூஷன் அனுப்பி உள்ளார். தொடர்ந்து சீனிவாசன், பாண்டியன், விஜயகுமார் ஆகியோர் வங்கியில் இருந்து பேசுகிறேன் என மாற்றி மாற்றி பேசி ஆசிரியரை தன் வலையதுக்குள் சிக்குவைத்த மர்ம ஆசாமிகள் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர் செய்வதறியாமல் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சைபர்கிரையில் புகார் அளித்தார். போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குறுந்தகல்களை நம்பி ஏமாற வேண்டாம் என செய்தித்தாள்கள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரம் வந்தால் கூட படித்தவர்களே இது போல் ஏமாற்றம் அடைந்துள்ளதை காணும்போது வியப்பாக உள்ளது.

Also Read: “பொய்யை ஊர் சுற்ற விட நினைக்கும் அற்பர்களுக்கு துணை போகலாமா?”: ‘தினத்தந்தி’ நாளேட்டுக்கு சிலந்தி கேள்வி!