Tamilnadu

பயணிகளின் குறைகளை கேட்க Whatsapp Group; மகளிர் - மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து: அமைச்சர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டமானது, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையினை மேம்படுத்துதல், அறிவிப்புகளின் செயல்படுத்தல் நிலை, விழாக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குதல் மற்றும் போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடக்க உரையில், தமிழக அரசின் சிறப்பு திட்டமான கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் நாளது வரையில் 173 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுநர் / நடத்துநர்கள் மகளிரை அதிக மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படா வண்ணம், பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பேருந்துகளை இயக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க வேண்டும் என தெரிவித்தார்கள். மேலும், பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.

போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார்கள். பேருந்து இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்தல், போதுமான வருவாய் இல்லாத தடத்தில் ஆய்வு செய்து பேருந்துகளை இயக்குதல், போக்குவரத்துக் கழக சொத்துக்கள் மூலம் வருவாயை ஈட்டுதல், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தல், டீசல் மற்றும் பெட்ரோல் நிலையங்களை அமைத்து இயக்குதல், பணியாளர்கள் செய்யும் நற்செயல்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் வெளியிடுதல் ஆகியவற்றை செயல்படுத்திட வேண்டும் எனவும், நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள போக்குவரத்துக் கழகங்களின் காலி இடங்களை தனியார் பங்களிப்புடன் வருவாய் ஈட்டக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவற்றை செயல்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்கள்.

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஏற்றும் நிலையம் அமைத்தல், தானியங்கி வாகன சோதனை மையம் அமைத்தல், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் இரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு இணைப்புப் பேருந்துகளை இயக்குதல், பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு படிப்படியாக அனைத்துப் பேருந்துகளுக்கும் தானியங்கி கதவுகள் அமைத்தல், மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து, அவர் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய குறைபாடுகளை சரி செய்தல், மழை காலங்களில் சாலைகள் பழுதடைவதால் இடர்பாடு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்கு சாலைகளை சரி செய்திட நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினை அணுகி சரிசெய்தல், விபத்துகளை குறைக்க ஓட்டுநர்/நடத்துநர்களை சுவாசக் கருவி மூலம் தினசரி ஆய்வு செய்தல், 100% மின்னணு வருகைப்பதிவினை செயல்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்கள்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ஒவ்வொரு போக்குவரத்துக் கழகங்கள் வாரியாக ஆய்வு செய்த பின்பு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார்கள். பயணிகளின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்திட Grievance Whatsapp Group மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் Whatsapp Group ஏற்படுத்திட வேண்டும் எனவும், மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுடன் Whatsapp Group-ஐ ஏற்படுத்திட வேண்டும் எனவும், “நவ திருப்பதி” போன்ற சுற்றுலா தொகுப்பை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்க எல்லையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஏற்படுத்திட வேண்டும்.

பணியாளர்கள் தொடர்ந்து பணிக்கு வருவதை உறுதி செய்யும் பொருட்டு ஆலோசனை வழங்கிட வேண்டும் எனவும், நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு பேருந்து போக்குவரத்தை கொண்டு சேர்ப்பதால் ஏற்படும் இழப்பிற்கான தொகையை, மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெற முன்மொழிவு செய்யலாம் எனவும், மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அறியும் பொருட்டு பிங்க் வண்ணம் தீட்டிட வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.

Also Read: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் நடைமுறை.. பதிவுத்துறையில் 3 புதிய திட்டங்கள்: தொடங்கிவைத்த முதலமைச்சர்!