Tamilnadu

மின் கம்பி மீது உரசிய பீரோ.. 9 ஆண்டு குடியிருந்த வீட்டை காலி செய்த குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்!

தருமபுரி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பச்சயப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது மாடியில் இலியாஸ் பாஷா, இவரது மனைவி சிராஜ் ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் வெளியூரில் வேலை பாரத்து வருகின்றனர்.

இந்நிலையில் இலியாஸ் தான் குடியிருந்த பச்சியப்பன் வீட்டில் இருந்து காலி செய்து மற்றொரு வீட்டிற்கு குடியேற முடிவு செய்துள்ளார். இதையடுத்து இன்று வீட்டை காலி செய்வதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் வீட்டில் இருந்த பொருட்களை மினிலாரி ஓட்டுனர் கோபி என்பவரை வரவழைத்து 2 வது மாடியில் இருந்து பொருட்களை கயிறு கட்டி வாகனத்தில் ஏற்றியுள்ளார். இவர்களுக்கு உதவியாக கோபியின் நண்பர் குமார், வீட்டின் உரிமையாளர் பச்சியப்பன் ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பீரோவை எடுத்து செல்லும் போது வீட்டின் அருகே சென்ற மின்கம்பியில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இலியாஸ் மற்றும் ஓட்டுனர் கோபி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பச்சயப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு பச்சயப்பனை மீட்டு அருகே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பச்சயப்பன் உயிரிழந்தார். தருமபுரியில் வீடு காலி செய்யும் போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: குளிக்க சுடுதண்ணீர் வைத்தபோது துயரம்..மின்சாரம் பாய்ந்து ஒரே இடத்தில் தாய்,மகளுக்கு நேர்ந்த சோகம் !