Tamilnadu

மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின் : நெகிழ்ந்த கிராம மக்கள்!

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில், சேலம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு 13 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மலை கிராமத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மற்றும் கைம்பெண்கள், திருநங்கைகளுக்கு நிதி உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாமன்னன் திரைப்பட குழுவினர் வழங்கினர்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சேலத்தில் நடைபெற்று வருகிறது. மாமன்னன் திரைப்பட படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் சார்பில், சேலம் மாவட்டம் ஜருகுமலை என்ற மலை கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மலை கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் பங்களிப்பாக 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை, சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் வழங்கினார்.

இதேபோன்று அந்த மலை கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு சிறிய அளவிலான மளிகை கடை வைப்பதற்கான அனைத்து பொருட்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மலை கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் என 55 பேருக்கு நிதி உதவிகளை வழங்கினார்.

மேலும் ஜருகுமலை கிராமத்திற்கு செல்லும் வழியில் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியும் வகையில் சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகளும் மாவட்ட கூடுதல் ஆட்சியரிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாமன்னன் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் நடிகர் பகத் பாசில், ரெட் ஜெயன் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அறங்காவலர் பி கே பாபு, ராஜா, ராஜ்குமார், தர்மராஜ், நட்ராஜ், உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

நிதி உதவி பெற்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறும் பொழுது, படபிடிப்பிற்கு வந்த பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும் அதன் அடிப்படையில் உடனடியாக தங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

Also Read: “சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” : அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !