Tamilnadu

”படியில் பயணம் செய்யமாட்டோம்” : மாணவர்களிடம் உறுதிமொழி வாங்கும் பணி தொடரும் - அமைச்சர் சிவசங்கர் !

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, அரசுப் போக்குவரத்து கழக பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மதுரையில் பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படியில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் நெரிசல் மிகுந்த தடங்கலில் கூடுதல் பேருந்துகள் விடுதல், பேருந்தின் படிகளில் கதவுகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் போக்குவரத்துதுறையும் எடுத்து வருகிறது.

மேற்கூறிய இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் படியில் தொங்கி பயணம் செய்யும் மாணவர்களை "படியில் பயணம் செய்யமாட்டோம்" என்று உறுதி மொழி ஏற்க செய்யும் பணியில் காவல்துறையினர், இயக்கூர்தி துறையினர், போக்குவரத்து துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேல்மருவத்தூர் சம்பவம் குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தனது முகநூலில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "மேல்மருவத்தூர் அருகே, இன்று அரசுப் போக்குவரத்து கழக பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழும் காட்சி பதற வைக்கிறது. அந்தப் பேருந்து அச்சரப்பாக்கம் - செய்யூர் இடையே இயக்கப்படுவது. இன்று மேல்மருவத்தூரில் 106 பெண்கள் ஏறியுள்ளனர். 33 மாணவர்கள், 24 ஆண்கள் பயணம் செய்துள்ளனர். பெண் பயணிகள் திடீரென அதிகமானதால், மாணவர்கள் உள்ளே செல்லாமல் படிக்கட்டில் பயணித்துள்ளனர். நடத்துனரும், ஓட்டுநரும் மாணவர்களை உள்ளே வர சொல்லி அழைத்தும் ஏறவில்லை. அப்போது தான் அந்த மாணவர் கை நழுவி கீழே விழுந்தார். நல்வாய்ப்பாக தப்பினார் அந்த மாணவர்.

பெண்கள் அதிகமாக வந்தது எதிர்பாராதது. இல்லை என்றால், எப்போதும் போல் மாணவர்கள் பயணம் செய்ய அந்த பேருந்தே போதுமானது. மாணவர்கள் பேருந்தினுள் சென்றிருந்தால் விபத்து நேரிட்டிருக்காது.

நேற்று தான், மதுரையில் 9ஆம் வகுப்பு மாணவன் பிரபாகரன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கலங்கச் செய்யும் சம்பவம் நடந்தேறியது. இன்று இந்த சம்பவம்.

மதுரையில் "படியில் பயணம் செய்யமாட்டோம்" என்று மாணவர்களை உறுதி மொழி ஏற்க செய்யும் பணியில் காவல்துறையினர், இயக்கூர்தி துறையினர், போக்குவரத்து துறையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுதும் இந்தப் பணி தொடரும்.பெற்றோர் தம் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள், தம் பெற்றோர் வீட்டில் தமக்காக காத்திருப்பர் என்பதை உணர்ந்து பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார்.

Also Read: உ.பி : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள்..பெண்ணின் தாயை விசாரணைக்கு அழைத்து வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர்!