Tamilnadu

அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தற்கொலை.. காரணம் குறித்து போலிஸார் விசாரணை : மதுரையில் பரபரப்பு !

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர்தான் பாஸ்கரன். இவருக்கு சுமதி என்ற மகள் இருக்கும் நிலையில், அவருக்கும் சரவணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தற்போது முன்னாள் அமைச்சரின் மகள் மற்றும் மருமகன் மதுரையிலுள்ள ஒத்தப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொறியியல் பட்டதாரியான சரவணன், அந்த பகுதியில் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.

ex minister baskaran

இந்த நிலையில், சரவணன் நேற்று காலை தனது அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. அதோடு அவரது கதவும் நீண்ட நேரமாக திறக்கவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது வீட்டார் கதவை தட்டி பார்த்தனர். அப்போதும் திறக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த குடும்பத்தினர் சரவணனின் சகோதரன் கர்ணனை அழைத்து அவரது அறையின் கதவை உடைந்தனர்.

அப்போது சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் சரவணனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் சரவணன் தற்கொலைக்கான காரணம் குடும்ப தகராறா ? அல்லது தொழில் முன்விரோதம் காரணமா ? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளைஞர்களின் மன அழுத்தத்திற்கு தொழில்நுட்பங்கள் காரணமா?.. இதற்கு தீர்வுதான் என்ன?