Tamilnadu

‘10,000 கொடுத்து அண்ணாமலைய பில்டப் பண்ணி பேச சொன்னாங்க… நானும் பைத்தியகாரதனமா பேசிட்டேன்’ : நடிகை வாசுகி!

நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் ஒரு காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை வாசுகி. பின்னர் படவாய்ப்பு குறைந்ததால் அதிமுகவில் இணைந்து அக்கட்சியில் 22 ஆண்டுகளாக பேச்சாளராக வலம்வந்தார்.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர், அக்கட்சி நடத்திய போராட்டத்தில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதோடு அந்த மேடையில் இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு வருங்கால முதலமைச்சர் அன்பு தம்பி அண்ணாமலையை போல யாரும் வரமுடியாது. அவரை முதல்வராக்க சபதம் ஏற்கிறேன். திமுக ஆட்சி இன்னும் 15 நாளில் கவிழ்ந்து விடும். இனி ஏதும் செய்யமுடியாது. எம்.ஜி.ஆருக்கு பின்னர் அண்ணாமலைதான் என்றும் பேசியிருந்தார். மேலும் அவர் முக்கிய தலைவர்களை ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,அவர் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அதில் பேசிய அவர், "முன்னர் 22 வருடம் அதிமுகவில் இருந்தேன். அங்கு அம்மா இறந்தபின்னர் கட்சியில் வாய்ப்பு இல்லை. மேலும் இனி அந்த கட்சியை நம்ப முடியாது என்பதால் பா.ஜ.கவில் சேர்ந்தேன்.

பாஜக மேடையில் இப்படி பேச 10 ஆயிரம் கொடுத்தார்கள். எனக்கு கணவர், மகன் இல்லை, என்னை நானே கவனித்துக்கொள்ள பணம் வேண்டும் என்பதால் கட்சியில் இணைந்தேன்" என்று கூறினார். மேலும், "அந்த பாஜக அந்த மேடையில் தான் அண்ணாமலையை முதன் முறையாக பார்க்கிறேன். அதற்கு முன்னர் அவர் யார் என்றே தெரியாது. அது பாஜக மேடை என்பதால் முதல்வராவார் என்று பேசினேன். அவர் முதல்வராவது எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது: என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அந்த மேடையில் உதயநிதி, திமுக பற்றி பேசியது எல்லாம் தவறுதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அப்போது ஏதும் தெரியாமல் உளறிவிட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Also Read: FINLAND பிரதமர் வீட்டில் ஆபாச புகைப்படம் எடுத்த தோழிகள்.. வெளியான புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சை !