Tamilnadu

'Cinderella ஒத்த செருப்பு' : இதுக்கு என்னங்க அர்த்தம்.. PTR ட்வீட்டுக்கு dictionary-ல் தேடும் சங்கிகள்!

மதுரையில் நேற்று உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கட்சிக் கொடியுடன் கூடியிருந்த பா.ஜ.க.வினர் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் இராணுவ வீரருக்கு இறுதி மரியாதை செய்திடும் அரசு நிகழ்ச்சியில் கட்சி நிகழ்ச்சியைப் போன்று ஏன் நடந்து கொள்கிறீர்கள்? என அமைச்சர் கேள்வி எழுப்பிட, உடனே அங்கிருந்த பா.ஜ.க.வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர்.

அமைச்சர் இராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும்போது அங்கு கூடி இருந்த பா.ஜ.க அவரது காரின் மீது செருப்பு வீசியும், கார் கண்ணாடிகளை அடித்தும் தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று பெரும் சர்ச்சையான நிலையில், பலரும் இந்த செயலுக்கு பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் கார் மீது செருப்பை வீசி தாக்குதல் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர்., கூறுகையில், "தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் பேசுவதற்கான சரியான தருணம் இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை; பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும்” என்றார்.

அதோடு இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நேற்று என் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து பேச ஏராளம் உள்ளது. இப்போதைக்கு மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது. அது உங்களுக்கு வேண்டுமானால், என்னுடைய அலுவலர்கள் அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்ட 'Cinderella-வின் ஒத்த செருப்பு' என்றால் என்ன என்றும், யார் அந்த Cinderella? என்றும் பலரும் சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.

Cinderella என்பது, குழந்தைகளுக்கு கூறக்கூடிய ஒரு கதை. முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் சிண்ட்ரெல்லா என்ற இளம்பெண் அவரது சித்தி வீட்டில் வாழ்ந்து வந்தார். அங்கே அவரை அவரது சித்தி மற்றும் சித்தியின் 2 மகள்கள் கொடுமைபடுத்தி வந்தனர்.

ஒருநாள், அந்த நாட்டு மன்னன், நாட்டில் இருக்கும் அனைத்து அழகான இளம்பெண்களும் அரண்மனை விருந்துக்கு வரவேண்டும். அங்கே இளவரசருக்கு யாரை பிடித்திருக்கிறதோ, அவரை இளவரசருக்கு திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார்.

இதனால் அனைத்து பெண்களும் அலங்காரம் செய்து அங்கே சென்ற நிலையில், Cinderella-வை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, அவர் சித்தி மகள்களும் அங்கே சென்றனர். இதனால் வருத்தத்தில் Cinderella இருந்தபோது ஒரு தேவதை வந்து, தனது சக்தி மூலமாக Cinderella ஒரு இளவரசியாக மாற்றியது. மேலும் Cinderella-வுக்கு ஒரு ஜோடி கண்ணாடி செருப்பும் வழங்கியது. ஆனால் அது குறிப்பிட்ட நேரம் மட்டுமே இருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்தது.

இதையடுத்து Cinderella ஒரு இளவரசி போல் மன்னர் வீட்டு விருந்துக்கு சென்றார். அங்கே இளவரசர் Cinderella-வை பார்த்தவுடன் பிடித்து போய் அவருடன் சேர்ந்து நடமாடுவார். ஆனால் அவரது Cinderella - இளவரசிக்கான நேரம் முடியும் நேரத்தில் இளவரசரை விட்டுவிட்டு வேகமாக வீட்டிற்கு ஓடுவார். அப்படி ஓடும்போது தனது காலில் இருந்த ஒரு செருப்பை தவறவிட்டுவிடுவார்.

பின்னர் அந்த ஒத்த செருப்பை எடுத்த இளவரசர், அந்த பெண்ணை கண்டுபிடிக்க சொல்லி அனைத்து காவலாளிகளை உத்தரவிடுவார். எனவே நாடு முழுக்க அனைத்து வீடுகளில் இருக்கும் இளம்பெண்களுக்கு அந்த செருப்பை அணிவித்து பார்க்கும் போது, Cinderella-வுக்கு மட்டுமே அந்த செருப்பு சரியாக சேரும்.

பின்னர் அவரை அரண்மனைக்கு காவலாளிகள் அழைத்து சென்ற பிறகு, இளவரசர் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்பார். Cinderella-வும் சரி என்று சொல்ல, இருவரும் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ்வர். இதுவே Cinderella-வின் ஒத்த செருப்பு கதை.

அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க பிரமுகரான சரவணனை பா.ஜ.க கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “Cinderella-வின் ஒத்த செருப்பு பத்திரமாக உள்ளது” : பங்கமாய் கலாய்த்த அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்!