Tamilnadu

"என் கணவருக்கு யாரும் செய்யவில்லை.. அதனால் நான் செய்கிறேன்.." நடிகை மீனாவின் உருக்கமான பதிவு !

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா. இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு வித்யாசாகர் என்பவருடன் திருமணம் ஆகி, நைனிகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர், நுரையீரல் தொடர்பான பிரச்னையால் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இவரது இறுதிச்சடங்கை மீனா மற்றும் அவரது மகள் நைனிகாவும் சேர்ந்து செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க செய்தது.

இந்த நிலையில், தற்போது நடிகை மீனா தான் உடல் உறுப்பு தானம் செய்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். "ஒரு உயிரை காப்பற்றுவதை விட வேறு எதுவும் சிறந்த விஷயம் கிடையாது. அதிலும் உடல் உறுப்பு தானம் என்பது ஒரு உன்னதமான ஒன்று. நாள்பட்ட நோயால் அவதிப்பட்டு வரும் பலருக்கும் இது மறு வாழ்க்கை கொடுக்கும்.

ஒரு வேளை, எனது கணவருக்கும் யாராவது உறுப்பு தானம் செய்திருந்தால், எனது வாழ்க்கை தற்போது மாறியிருக்கும். ஒருவர் செய்யும் உடல் உறுப்பு தானம், 8 பேர் உயிரை காப்பாற்றும். அனைவருமே உடல் தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் இருக்கும் விஷயம் கிடையாது. இது குடும்பம், உற்றார் உறவினர்கள் போன்ற அனைவரின் சம்பந்தப்பட்டது.

இன்று நான் என்னுடைய உடல் உறுப்பை தானம் செய்ய உறுதிமொழி எடுக்கிறேன். இதுவே நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகை மீனாவின் இந்த முடிவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்ததோடு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ’என் கணவர் இறப்புக்கு இதுதான் காரணம்..’ : தவறான தகவல் பரப்புவோருக்கு மீனா விடுத்த உருக்கமான வேண்டுகோள்!