Tamilnadu

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு.. அராஜகத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் 5 பேர் கைது!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ம் தேதி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இவர்களின் இந்த வீர மரணத்திற்குப் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பா.ஜ.கவினர் திடீரென அவரது காரை வழிமறித்துள்ளனர்.

மேலும் அவர்கள் அமைச்சர் கார் மீது காலணியை வீசி அராஜகமாக நடந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்த போலிஸார் அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர். பிறகு அமைச்சர் அங்கிருந்து காரில் சென்றார். இப்படி துக்க வீட்டில் அராஜகமாக நடந்து கொண்ட பா.ஜ.க-வினர் 5 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Also Read: “இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு”: இலவசங்கள் கூடாது என அறிவுரை சொல்பவர்களுக்கு பாடம் எடுத்த முதல்வர்!