Tamilnadu

கேரளாவில் மூதாட்டி கொலை.. சென்னை ரயில் நிலையத்தில் போலிஸாரிடம் சிக்கிய வடமாநில வாலிபர்: நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கேசவதாசபுரம் பகுதியைச் சேர்ந்த மனோரமா. 65 வயது மூதாட்டடியான இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மூதாட்டி மனோராமா வசிக்கும் வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்த வந்த 5 வடமாநில தொழிலாளர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து உள்ளனர்.

இதனால் போலிஸாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவர்களிடம் தங்கி வேலைபார்த்து வந்த ஆதம் அலி என்ற நபர் நேற்றிலிருந்து காணவில்லை எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி. வி காட்சிகளில் ஆய்வு செய்தபோது ஆதம் அலி, மூதாட்டி உடலை இழுத்துச் சென்ற காட்சிகளும் தெளிவாகப் பதிவாகி இருந்தது. அதேபோல் மூதாட்டியைக் கொலை செய்து வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு ஆதம் அலி மாயமானதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாயமான ஆதம் அலியை போலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் ரயில் மூலமாக ஆதம் அலி தப்பிச் செல்ல உள்ளதாக கேரள போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கேரள போலிஸார் சென்னை போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை எடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்த ஆதம் அலியை போலிஸார் சுற்றி வளர்த்து கைது செய்துள்ளனர் இது குறித்து கேரள போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கேரள போலிஸாரிடம் கொலையாளி ஆதம் அலியை சென்னை போலிஸார் ஒப்படைத்தனர்.

Also Read: 6 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் - selfie எடுக்கும்போது அருவியில் விழுந்த இளைஞர் !