Tamilnadu

'Chess Olympiad.. நாளை நிறைவு விழா..' வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குவது யார் ?

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னை மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டித்தொடரில் 187 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று போட்டியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போட்டி நாளை நிறைவடையவுள்ள நிலையில், போட்டியாளர்கள் தங்களது ஆட்டத்தை மிகவும் நேர்த்தியாக விளையாடி வருகின்றனர். இந்த போட்டித்தொடரின் 9-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இதுவரை தோல்வியை காணாத இந்திய மகளிர் 'ஏ'அணி தோல்வியை தழுவியது. மேலும் ஓபன் 'பி' பிரிவு தமிழக வீரர் பிரக்ஞானந்தாவின் நேர்த்தியான நகர்தலால் வெற்றி பெற்றது.

இப்படி ஆட்டத்தின் இறுதி நாள் நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தற்போது இந்திய ஓபன் 'ஏ' பிரிவு 4-வது இடத்திலும், 'பி' பிரிவு 2-வது இடத்திலும், 'சி' பிரிவு 23-வது இடத்திலும் உள்ளது. அதேபோல் இந்திய மகளிர் 'ஏ' அணி 2-வது இடத்திலும், 'பி' அணி 10-வது இடத்திலும், 'சி' அணி 16-வது இடத்திலும் உள்ளது.

இந்த போட்டித்தொடரின் இறுதிநாளான நாளை யார் வெற்றி பெறப்போவது என்று அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை யார் வழங்கப்போவது என்று கேள்விகளும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யானதன் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய அவர், "தொடக்க விழா போலவே இறுதி விழாவையும் நேரு உள்விளையாட்டு அறங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார்" என்று தெரிவித்தார்.

Also Read: Chess Olympiad : இந்திய ஓபன் 'ஏ' அணியை வெற்றிபெற செய்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா !