Tamilnadu

மக்களே உஷார்.! SWIGGY ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்.. LOAN APP மூலம் நூதன முறையில் பண மோசடி !

சென்னையில் SWIGGY, ZOMATO போன்ற நிறுவனங்களில் இளைஞர்கள் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் பணிப்புரிந்து வந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஊழியர் சென்றுகொண்டிருக்கும் போதே வழியில் மடக்கிய மர்ம நபர் அவரிடம் பேச்சு கொடுத்தார்.

அப்போது, அவரிடம் ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து பெட்ரோலுக்கான பணத்தை முன்கூட்டியே ஒரு செயலி மூலம் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். முதலில் அதை நம்பாத ஊழியர், அவரிடம் கேள்விகளாக கேட்டுள்ளார். பிறகு அவர் கூறிய செயலியை டவுன்லோட் செய்துள்ளார். செய்தபின்னர், அதில் அவரது விவரங்களையும் சேர்த்துள்ளார்.

Also Read: 'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!

இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது வங்கி கணக்கிற்கு ரூ.2000 வந்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த ஊழியர் அவருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவரிடம் 2000 ரூபாயில் தனக்கு 1000 ரூபாய் கொடுத்துவிடுமாறு கேட்க, இவரும் மறுக்காமல் கொடுத்துள்ளார். பின்னர் இந்த செயலியை பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு மர்ம நபர் சென்றுள்ளார்.

அவர் சென்ற சில மணி நேரங்களிலேயே 2 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் அதனை குறிப்பிட்ட தேதிக்குள் வட்டியுடன் கொடுக்குமாறும், அவரது மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பிறகு இந்த சம்பவம் குறித்து தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த மறுநாள் அதே நபர், வேறொரு ஸ்விக்கி ஊழியரிடம் தனது கைவரிசையை காட்ட முயற்சித்துள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட இளைஞர் மூலம், இந்த ஊழியருக்கும் மோசடி விவகாரம் தெரிய வர, தனக்கு தெரியாத மாதிரியே அந்த மர்ம நபரிடம் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் இரகசிய தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை மடக்கி பிடித்த ஊழியர்கள் அவரை அடித்து அவரை பற்றி விசாரித்தனர். அப்போது அவர் பெயர் கார்த்திக் என்பதும், ரிங் என்ற லோன் ஆப் மூலம் இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த மர்ம நபர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாக கோவையில் ஒரு இளம்பெண் இதே loan app செயலி மூலம் பணம் ஏமாற்றப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'யாரும் ஏமாந்துடாதிங்க'.. Loan App-ல் சிக்கலில் மாட்டிக் கொண்ட பெண்: கண்ணீர் மல்க புகார்!