Tamilnadu

வீடு திரும்பும் போது எதிரே வந்த ட்ராக்டரால் நடந்த துயரம்.. தாய் கண்முன்னே பறிபோன 2 குழந்தைகள் உயிர்!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கருநீலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் எலக்ட்ரிஷன் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி தேன்மொழி. இந்த தம்பதிக்கு சித்தார்த் (4) லோகேஷ் (3) என இரண்டு குழந்தைகள் இருந்தன.

இந்நிலையில் தேன்மொழி தனது இரண்டு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகே உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது தேன்மொழி வாகனம் மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி தேன்மொழி அவரது இரண்டு குழந்தைகளும் சாலையில் கீழே விழுந்துள்ளார்.

அந்தநேரம், பின்னால் வந்த டிராக்டர் வாகனம் இரண்டு குழந்தைகள் மீதும் ஏறியது. இதில் தாயின் கண் முன்னே இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் குழந்தைகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சாலை விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கண்முன்னே இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சினிமா பட பாணியில் தப்பிக்க முயன்ற குற்றவாளிகள்.. புத்திசாலித்தனமாக மடக்கி பிடித்த தமிழ்நாடு போலிஸ்!