Tamilnadu

DSP-யான டீ கடைக்காரர் மகள் - முதல் முயற்சியிலேயே அபாரம்.. நம்பிக்கையூட்டும் வெற்றி கதை !

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள செட்டியாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமுத்து- வீரம்மாள் தம்பதியின் மூன்றாவது மகள் பவானியா. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த பவானியாவின் தந்தை டீ கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

தன் குடும்ப சூழலை உணர்ந்த பவானியா விவசாய கூலி வேலைக்கு சென்றுகொண்டெ தனது படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். மூத்த சகோதரிகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், கல்வியே தன்னை உயர்த்தும் என்பதை உணர்ந்து கடுமையாக படித்து வந்துள்ளார்.

அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் படித்த பவானியா புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கணிதம் படித்துள்ளார். அதன்பின்னர் TNPSC-க்கு படிக்க விரும்பியுள்ள பவானியா தன் குடும்ப சூழல் காரணமாக வீட்டில் இருந்தே படிப்பை தொடர்ந்துள்ளார்.

முதலில் GROUP 1 முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், பின்னர் சென்னையில் உள்ள மனிதநேயம் இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் படிப்பை தொடர்ந்துள்ளார்.

பின்னர் தனது முதலாவது முயற்சியிலேயே முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார். ஆனாலும் இதோடு தனது இலக்கை நிறுத்தாத அவர், IAS அதிகாரியாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அதற்காக தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: வங்கிகளில் வீடு, வாகன கடன் வாங்கப்போகிறீர்களா? : இனி வட்டி விகிதம் உயரும் அபாயம்- ஏன்?