Tamilnadu

இளம் பெண்ணை காரில் கடத்திய 15 பேர் கொண்ட கும்பல்.. செல்போன் டவர் மூலம் 3 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் மயிலாடுதுறை மயிலம்மன் நகரில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார். இதையடுத்து விக்னேஸ்வரன் நடவடிக்கை பிடிக்காத அப்பெண் அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், அடிக்கடி அப்பெண்ணின் குடும்பத்தாருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு தனது கூட்டாளிகள் 15 பேருடன், பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து அப்பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெண்ணை கடத்திச் சென்ற காரின் எண் குறித்து விசாரணை தொடங்கினர்.

பின்னர் அந்த காரின் உரிமையாளரை கண்டுபிடிக்கப்பட்டு, செல்போன் டவரை போலிஸார் ஆய்வு செய்தபோது விக்ரவாண்டி டோல்கேட் அருகே காரில் செல்வது தெரியவந்தது.

உடனே மயிலாடுதுறை போலிஸார் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விக்ரவாண்டி டோல்கேட் அருகே காரை போலிஸார் மடக்கி பிடித்தனர். பிறகு காரில் இருந்த அப்பெண்ணை போலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் பெண்ணை கடத்தி வந்த 15 பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட இளம்பெண்ணை 3 மணி நேரத்தில் போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: டெல்லியில் மதிக்கவே மாட்டார்கள்..சென்னைதான் எப்போதும் BEST.. தமிழ்நாட்டை புகழ்ந்த டென்மார்க் செஸ் வீரர் !