Tamilnadu

ரூ.100 போட்டா ரூ.200 - ரூ.200 போட்டா ரூ.400..இரட்டிப்பாக பணம் தருவதாக ரூ.1.80 லட்சம் மோசடி: பின்னணி என்ன?

சென்னை புளியந்தோப்பு டி.கே. முதலி தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் . திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் சென்னையில் தங்கி தனியார் பிளைவுட் கம்பெனி ஒன்றில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த ஜூலை 20 ஆம் தேதி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் எளிய முறையில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. உடனே அந்த லிங்கை திறந்து உள்ளே சென்றபோது நீங்கள் செலுத்தும் பணம் இருமடங்காக திரும்ப கொடுப்பதும் என்ற தகவல் இருந்துள்ளது.

உடனே சோதனை முயற்சியாக ராமகிருஷ்ணன் முதலில் ரூ.100 அனுப்பிய நிலையில், உடனடியாக அவருக்கு 200 ரூபாய் கிடைத்துள்ளது. பின்னர் ரூ.200 அனுப்ப ரூ.400 திருப்பி வந்துள்ளது. இதனால் இந்த இணையதளத்தாய் நம்பிய அவர், கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பும் தொகையை அதிகரித்து வந்துள்ளார்.

1000,2000,5000,10,000 என்று அனுப்பியவர் முடியில் 50 ஆயிரம் அனுப்ப இரட்டிப்பாக அதுவும் திரும்ப வந்துள்ளது. பின்னர் அந்த இணையத்தளத்தில் இருந்தவர்கள் உங்களால் அனுப்ப முடிந்த அளவு அனுப்புமாறும் அது இரண்டு மடங்கு திருப்ப வரும் என்றும் ஆசை காட்டியுள்ளனர்.

இதனால் சபலமுற்ற ராமகிருஷ்ணன் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் காசு வாங்கி, ரூ.1,86,840ஐ அந்த இணையதளத்துக்கு அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் அந்த இணையதளத்தை திறந்து பார்த்தபோது அது ஓபன் ஆகாமல் இருந்துள்ளது.

இதைப்போல பல முறை முயன்றும் அந்த இணையதளம் திறக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். உடனே, இந்த சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இந்தியாவில் கண்டறியப்பட்ட பன்றி காய்ச்சல்.. 300 பன்றிகளை கொல்ல மாநில அரசு முடிவு!