Tamilnadu

”படத்தில் இருப்பது காணாமற்போன பேனா அல்ல; கலைஞரின் கை வாள்!” - அமைச்சர் தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவ சிற்பம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் தற்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.உதயசூரியன் வடிவில் அமைய உள்ள கலைஞருக்கு நினைவிடத்தில், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கலைஞரின் பேனா குறித்து நினைவைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அந்த பேனா! “ தலைவர் கலைஞர் அவர்கள் 1945ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளிவந்த ‘தொழிலாளர் மித்திரன்’ இதழில் எழுதிய கட்டுரையின் தலைப்பு இது!

காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்து காணாமற் போய்விட்ட பேனா ஒன்றினைக் குறித்த கட்டுரை அது. அந்தக் கட்டுரைக்குப் பின்னர் தான் புதுச்சேரி வீதிகளில் அவர் தாக்கப்பட்டு, பின்னர் தந்தை பெரியார் அவர்களால் ஈரோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் குடி அரசு இதழில் எழுதத் தொடங்கினார்.

படத்தில் இருப்பது காணாமற் போன பேனா அல்ல; கலைஞரின் கை வாள்!எத்தனையோ எழுத்தோவியங்களை வடித்தெடுத்த தலைவரின் கையில் இருந்த அறிவாயுதம்.

தலைவருடனான என் நினைவுகள் காலப் பெட்டகம் எனில் இந்தப் பேனாவோ நான் அடைந்த வாழ்நாள் பெருமை என்று அந்தப் பதிவுகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: கெஜ்ரிவாலின் பேனரை கிழித்து மோடியின் பேனரை மாட்டிய டெல்லி போலிஸ்.. அரசு நிகழ்ச்சியில் நடந்த வன்முறை!