Tamilnadu

செல்ஃபி மோகத்தால் நடந்த விபரீதம்.. ரயில்பெட்டி மீது ஏறிய பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விக்னேஷ்வர். 12ம் வகுப்பு படித்து வந்த இவர் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு வந்த நண்பர்கள் நான்கு பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து விக்னேஷ்வர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் ரயில் பெட்டியின் மேலே இருந்து கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விக்னேஷ்வரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பற்றி எரிந்த இரயில் தண்டவாளம்.. இரயில்கள் ரத்து.. அவசர நிலையை அறிவித்த இங்கிலாந்து அரசு! - காரணம் என்ன?