Tamilnadu

மதுபோதையில் பாலியல் தொல்லை.. மகனை கொலை செய்த தாய் உட்பட 4 பேர் கைது - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள காமயகவுண்டன்பட்டி சாலையில் வசித்து வருபவர் வேல்முருகன் (36). இவர் தனது மனைவி ரோஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து எட்டு ஆண்டுகளாக தனது தாயார் கனகமணி (62) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையான வேல்முருகன் தனது தாயாருடன் மது போதையில் அடிக்கடி தகராறு செய்து வருவதுடன் அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

மகனின் தொல்லை தாங்க முடியாத தாயார் கனகமணி அவரது சகோதரர்கள் கண்ணன் (57) குமார்( 45) மற்றும் சகோதரியின் கணவர் கருப்பையா(45) ஆகியோரிடம் மகனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் நாள்தோறும் பரிதவித்து வருவதாக தகவல் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தாயார் கனகமணி உள்பட நான்கு பேரும் சேர்ந்து வேல்முருகனின் கழுத்தை நெரித்தும், மூச்சை பிடித்தும், கொலை செய்து விட்டு மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என நாடகமாடி வேல்முருகனின் சடலத்தை இறுதிச் சடங்கு செய்வதற்காக மின் மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இறுதி சடங்கிற்கு வந்த உறவினர்கள் வேல்முருகனின் சாவில் மர்மம் இருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, கம்பம் வடக்கு காவல் நிலைய போலிஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டதில் தாயார் கனகமணி மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரும் சேர்ந்து அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளம் பெண் குத்தி கொலை.. வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: விசாரணையில் பகீர்!