Tamilnadu

காதலித்து திருமணம் செய்த இரு இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் நடைபெற்ற தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம்!

தன்பால் ஈர்ப்பாளர்களை உலகம் தவறானதாகவும், இயற்கைக்கு மாற்றாகவும் கூறிவந்த நிலையில், அதுவும் இயற்கையின் அங்கம்தான் என்பதை பல ஆய்வு முடிவுகள் மூலம் அறிவியல் ஒப்புக்கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் கார்த்திக் - கிருஷ்ணா என்ற இரு இளைஞர்கள் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் திருமணத்தை 4 பெண் அடிகளாரும், ஒரு ஆண் அடிகளாரும் நடத்தி வைத்தனர். கிருஷ்ணா கார்த்திக்கிற்கு தாலி கட்டி, குங்குமம் வைத்து அவரை திருமணம் செய்துகொண்டார்.

இது தொடர்பாக கூறியுள்ள அவர்கள், நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பி,ஏற்கனவே மோதிரம் மாற்றி கொண்டோம் என்றும், தாலி கட்டி கொண்டு திருமணம் செய்ய ஆசை இருந்ததால் அது பற்றி பேசி திருமணம் செய்ய முடிவெடுத்தோம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், எங்கள் திருமணத்தை யாராவது நிறுத்திவிடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு இருந்தது என்று கூறிய அவர்கள், திருமணம் நடந்தபோது மகிழ்ச்சியில் கண்ணீர் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளனர். இவர்களது திருமணத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “100 ஆண்டு பழமை.. 3800 டன் எடை.. அலேக்காக நகர்த்தப்பட்ட பிரம்மாண்ட கட்டடம்” : சாத்தியமானது எப்படி?