Tamilnadu

மாற்றுதிறனாளி குடும்பத்தை கவனித்து கொள்ளும் சுகுணா.. ஒரே நாளில் வங்கிப்பணி வழங்கி துயர் துடைத்த அரசு !

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஏ.சுகுணா என்பவர் வசித்து வருகிறார். மேலும் அவருடன் மூன்று தம்பிகளும், ஒரு தங்கையும் வசித்து வருகின்றனர். இந்த 4 பேருமே மாற்றுத் திறனாளிகள் என்பதால் சகோதரி சுகுணா திருமணமே செய்யாமல் பராமரித்து வருகிறார்.

தன்னுடன் பிறந்த சகோதரர்களுக்காக தன் வாழ்வை அர்பணித்துக்கொண்ட சுகுணா குறித்த செய்தி ஒரு பத்திரிக்கையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, இவர்களுக்கு ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் உதவி கிடைப்பதாகத் தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு எந்தவிதமான உதவி தேவை என்று கேட்டபோது, ஏதாவது நிரந்தரமாக வருமானம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு நலிந்தோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில்,இந்த குடும்பத்திற்கு ஒரு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் அயற்பணி முறையில் துணை ஊழியராக பணி ஆணையும், வங்கியின் பொதுநல நிதியிலிருந்து ரூ.20,000/-க்கான வங்கி வரைவோலையுடன், மூன்று சீருடைகளும் வழங்கப்பட்டன.

மேலும் கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் சுகுணா இல்லத்திற்கே நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து அவருக்குத் தேவையான அரசின் உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

Also Read: ‘இல்லம் தேடிக் கல்வி’ - 2 இலட்சமாவது மையம் தொடக்கம் : கல்வியில் புதிய இலக்கை எடுத்து வைத்த முதலமைச்சர்!