Tamilnadu

"அ.தி.மு.க என்ற திரைப்படத்தை இயக்கும் பா.ஜ.க".. முத்தரசன் கடும் தாக்கு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், "குடியிருப்போர் அவரவர் இடத்தில் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அறிவிப்பை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

அ.தி.மு.க அரசின் உட்கட்சி பூசலுக்கு பா.ஜ.க தான் காரணம். அ.தி.மு.க என்ற திரைப்படத்தை பா.ஜ.க இயக்குகிறது. இவர்கள் இயக்கத்திற்கு ஏற்றார்போல் அ.தி.மு.க-வினர் நடித்து வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு பேசிய தேசிய செயலாளர் ராஜா, "இந்திய நாடு தற்போது சூழலில், பொருளாதார சிக்கல் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இதற்கு எல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசுதான் காரணம்.

இந்த சூழலில் தான் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும், மதவாத அரசியலை முன்னிறுத்தும் பா.ஜ.க கட்சிக்கும் இடையே நடைபெறக்கூடிய தேர்தல்.

இந்திய நாட்டில் மதச் சண்டையை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்த பா.ஜ.க முயல்கிறது. அதனை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”சித்தாந்தம் அடிப்படையிலான தேர்தலாக மாறிய குடியரசு தலைவர் தேர்தல்”: முரசொலி தலையங்கம்!