Tamilnadu

அரசினர் சிறுவர் இல்லத்தில் ‘திடீர்’ விசிட்.. நெகிழ்ந்து போன மாணவர்கள் - கலந்துரையாடிய முதலமைச்சர் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து இன்று ரூ.118 கோடியில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பின்னர், இராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அவ்வில்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Also Read: இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல்.. எதை குறிப்பிடுகிறது முரசொலி தலையங்கம்?