Tamilnadu

5 பிள்ளைகள்.. கோடிக்கணக்கில் சொத்து : பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் தற்கொலை செய்ய முயன்ற 3 முதியவர்கள் !

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி - சின்ன பாப்பா தம்பதியினர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முழு நேர விவசாயியான இவர், தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு விவசாய தொழில் செய்து தான் படிக்க வைத்துள்ளார்.

ஆனால் படிப்பை முடித்த பிள்ளைகள் தங்களுக்கு திருமணம் முடிந்த கையோடு, பெற்றோர்களை தனியே விட்டு விட்டு, அவர்கள் குடும்பங்களுடன் வெளி ஊர்களில் குடிபெயர்ந்துவிட்டனர். இவர்கள் அனைவர்க்கும் குழந்தைகள் பிறந்தும் கூட தாய் தந்தையரை காண அடிக்கடி வருவதில்லை. எனவே, ராமசாமி அவரது மனைவி சின்னப்பாப்பாவுக்கு துணையாக அவர்களது அண்ணி ஜக்கம்மா ஆகியோர் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நாளாக ஆக வயது முதிர்வால், அவர்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஆள் இல்லாமல் மூன்று பெரும் தவித்து வந்துள்ளனர். 4 மகன்கள் இருந்தும் யாரும் இல்லாத அனாதை போல் தவித்து வருவதால் மிகுந்த மன வேதனையில் இருந்த இவர்கள், பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

பின்னர் எதேர்ச்சியாக ராமசாமி வீட்டிற்கு வந்த அண்டை வீட்டுக்காரர், அவர்கள் மயக்கம் போட்டு கிடந்ததை கண்டு பதற்றமடைந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினரை வரவழைத்து அவர்கள் மூன்று பேரையும் மீட்டு, செங்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 மகன்கள், 1 மகள் இருந்தும் மூன்று முதியவர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஓடும் காரில் நடந்த சோகம்.. தாய் மற்றும் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல்!