Tamilnadu

“இந்த பூமி பறவைகளுக்கும் சொந்தமானது” : 198 பறவை இனங்களை புகைப்படம் எடுத்து அசத்திய ரியல் ‘பக்ஷி ராஜா’ !

“இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் சொந்தமானது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்” என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதிகாலை வேளையில் பறவைகளின் சத்தம் நம் செவிகளுக்கு சங்கீதமாய் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அதற்கேற்றாற்போல் 2.0 படத்தில் அக்ஷய் குமாரின் பக்ஷி ராஜா கதாபாத்திரம் போல், நீலகிரி மாவட்டத்தின் பக்ஷி ராஜாவாக 198 க்கும் மேற்பட்ட பறவை இனங்களை புகைப்படங்களை எடுத்து, அதை ஆவணப்படுத்தி பறவைகளின் காதலனாக மாறியுள்ளார் மதிமாறன் என்ற புகைப்படக் கலைஞர்.

நீலகிரி 67% வனப்பகுதிகளை கொண்டு மிகப்பெரிய உயிர்ச் சூழல் மண்டலமாக திகழ்கிறது. நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக அல்லாமல் உலகில் உள்ள பறவையினங்களும் வந்து செல்லும் இடமாக உள்ளது.

இந்த பறவை இனங்கள் அனைத்தும் இந்த காலநிலையில் அதனுடைய இருப்பிடங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளையும் எப்படி அமைத்துக் கொள்கின்றன என்பதை துள்ளியமாக படம் பிடித்து அதை ஆவணப்படுத்தியுள்ளார் புகைப்படக் கலைஞர் மதிமாறன்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரியில் Sun Bird, Nilgiri Flycatcher, white Chick Barbet, Canary Head Fly Catcher, Nilgiri Laughing Thrush, orange Yellow FlyCatcher, King Fisher, oriental white eye, Blue Robin உள்ளிட்ட மேலும் பல்வேறு பறவை இனங்களின் 198 க்கும் மேற்பட்ட பறவைகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்த பறவைகளை பற்றி அவர் கூறுகையில், காடுகளில் தேவதைகளாக பறவைகள் இருப்பதாகவும் நீலகிரியில் உள்ள பூர்வீக பழங்குடியினருக்கு கடவுள் கொடுத்த பரிசாக இந்த பறவைகள் உள்ளதாகவும் அவர்களோடு மிக நெருக்கமாக பறவைகள் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

white Chick Barbet

மேலும் அவர் உலகிலுள்ள அனைத்து வண்ணங்களையும் தன்மேல் பூசிக்கொண்டு இந்தப் பறவைகள் வாழ்கின்றன. ஏதோ பறவையின் சத்தம் நம் காதுகளில் விழும் பொழுது அதனுடைய உருவம் இப்படித்தான் இருக்கும் என நமக்குத் தெரியாது. அப்படி இருக்கும் பொழுது இந்த பறவைகளை ஆவணப்படங்கள் எடுக்கும்போது அதனுடைய வாழ்வியல் முறைகள் மனிதராகிய நாமும் பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் பறவைகளை ஆவணப் படங்கள் எடுப்பதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கும் பறவைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள், தொலைபேசிகள் மூலம் தங்களது நேரங்களை செலவழிப்பதால் இயற்கையோடு ஒன்றி இருக்கும் உயிரினங்களை பற்றி அறியாமலேயே இருந்துவிடுகின்றனர்.

எனவே அதிகாலை வேலை மற்றும் மாலை வேளையில் பரந்திருக்கும் வானத்தை பார்ப்பதும் மரங்களில் உள்ள பறவைகளை பார்ப்பதும், அதனால் கிடைக்கும் புத்துணர்ச்சி மற்றும் அடுத்த கட்டத்திற்கான யோசனை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்குமெனவும் பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள ஒழுக்கம், தாய், தந்தையை மதித்தல், சுதந்திரமாக இருத்தல், போன்றவை இருக்கின்றன என புகைப்பட கலைஞர் மதிமாறன் கூறுகிறார்.

பூமியில் காடுகள் செழிக்கவும், மனிதர்கள் வாழவும் பறவைகளின் பங்களிப்பு அதிகம் என்பதே நிதர்சனமான உண்மை.

Also Read: 37 ஆண்டுகள் கழித்து நீலகிரிக்கு விசிட் அடித்த அரியவகை பறவை... ஆச்சர்யத்தில் உறைந்த ஆர்வலர்கள்!