Tamilnadu
என்னைய காப்பாத்துங்க.. உயிருக்கு போராடிய ஆட்டோ டிரைவர் :துரிதமாக செயல்பட்ட போலிஸ் அதிகாரி.. என்ன நடந்தது?
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (53). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 8-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து, தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார், நேற்று பகல் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சவாரிக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக திடீரென்று அவருக்கு இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து ஆட்டோவை எடுத்து கொண்டு புறப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி அதிகரித்தது. செய்வதறியாது திகைத்த சுரேஷ்குமார், அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அப்போது "ஐயா.. வலி தாங்கமுடியவில்லை.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறிய படி கூறி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
இதனைக்கண்டு பதற்றமடைந்த போக்குவரத்து காவல் அதிகாரிகள், அந்த வழியே சென்ற 108 ஆம்புலன்சை நிறுத்தி ஆட்டோ டிரைவரை அதில் ஏற்றி உடனே இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் அவரை காப்பாற்ற முடிந்ததாகவும் தெரிவித்தனர்.
அதி வேகத்தில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரின் நடவடிக்கையால் தற்போது ஒரு உயிர் மட்டுமல்ல ஒரு குடும்பமே காப்பாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பாக ஆட்டோ டிரைவர் சுரேஷ் குமாருக்கு ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!