Tamilnadu

“கலைஞருக்கு சிலை வைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..” : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கியுள்ளதாகவும், அந்த இடத்தில் ஜீவா கல்வி அறக்கட்டளை அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலை அமைக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.

கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த து. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது, பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Also Read: அடுப்பில் கொதித்த ரசத்தை எடுத்து கணவர் மீது ஊற்றிய மனைவி.. வெந்த முகத்தோடு கணவர் செய்த பகீர் சம்பவம்!