Tamilnadu

தண்ணீர் வாங்க சாலையை கடந்த போது நடந்த விபரீதம்.. டூவிலர் மோதியதில் சிறுவன், கல்லூரி மாணவன் பரிதாப பலி !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் கட்டனூரை சேர்ந்த யுகனேஷ் (7) என்கிற சிறுவன் தனது குடும்பத்துடன் வாகனம் மூலம் சென்றுள்ளார். அப்போது ஆறுமுகநேரி பகுதிக்கு முன்னர் உள்ள சீன தோப்பு பகுதியில், வாகனமானது நிறுத்தபட்டது,

அப்போது சீன தோப்பு பகுதியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பாதையாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ள பக்தர்களுக்கு ரத்தின குமார் என்பவர் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. அங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரும் இடத்திற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சிறுவன் யுகனேஷ் சாலையை கடக்க முயன்றுள்ளான்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக, திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கரம் வாகனம் சிறுவன் யுவனேஷ் மீது மோதியதில், சிறுவன் மற்றும் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த தூத்துக்குடி யை சேர்ந்த கல்லூரி மாணவன் இசக்கி ராஜா(21) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்த கார்த்திக் என்பவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த சிறுவன் யுகனேஸ் மற்றும் கல்லூரி மாணவன் இசக்கி ராஜாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து நடைபெற்ற இடத்தினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வருகைதந்து அவ்விடத்தினை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருக்கோயிலுக்கு வரும் போது சாலை விபத்தில் மோதி சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு எனக் கூறி ரூ.1.28 கோடி நிதியை வீணடித்த கிரண்பேடி - RTI மூலம் அம்பலம் !