Tamilnadu

காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை.. கணவன் குடும்பத்தை கூண்டோடு தூக்கிய போலிஸ் !

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் - கவிதா தம்பதியின் மகன் வினீத் பாலாஜி (வயது 29). இவர் ஊட்டி நகர் மேற்கு போலிஸ் நிலையத்தில் போலிஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வினித் பாலாஜிக்கும் திண்டுக்கல் சீலாப்பாடி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கார்த்திகைவேல் என்பவரது மகள் முத்துப்பாண்டீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். தம்பதியினர் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் 7-ந் தேதி முத்துப்பாண்டீஸ்வரி காவலர் குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஊட்டி நகர் மேற்கு போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் முத்துப்பாண்டீஸ்வரியின் பெற்றோர், வரதட்சனை கொடுமை காரணமாக எங்கள் மகள் இறந்ததாகவும், எனவே எங்கள் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் ஊட்டி டவுன் மேற்கு போலிஸ் நிலையம் மற்றும் ஆர்.டி.ஓ. விடம் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முத்துப்பாண்டீஸ்வரியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார். இந்த நிலையில் வரதட்சனை கொடுமை புகாரின்பேரில் போலிஸ்காரர் வினித் பாலாஜி அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன்- கவிதா ஆகிய 3 பேரை ஊட்டி டவுன் போலிஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

Also Read: அடுத்த 6 மாதத்தில்.. வேலையை ராஜினாமா செய்யப்போகும் 86% இந்தியர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!