Tamilnadu

குழந்தை பிறக்காததால் மன உளைச்சல்.. இளம் தம்பதி விபரீத முடிவு: போலிஸில் சிக்கிய கடிதம்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் பழைய பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இதையடுத்து இவருக்குக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், உறவினர்கள் தம்பதிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

அதிக நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தம்பதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலை கடிதம் ஒன்று போலிஸாருக்கு கிடைத்துள்ளது.

அதில்,"எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதமும் இல்லை" என எழுதி இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறக்காததால் மன உளைச்சலில் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிறந்து 3 நாளில் எறும்பு கடித்து ஆண் குழந்தை மரணம்?: உ.பி அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!