Tamilnadu
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 27 நபரிடம் 78 லட்சம் மோசடி.. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நடந்த அவலம்!
தமிழகத்தில் படித்து வேலையின்றி உள்ள இளைஞர்கள் அரசு பணியில் சேர வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி முயற்சிக்கும் இளைஞர்களை அடையாளம் கண்டு, அரசு பணி வாங்கி தருவதாக கூறி, பல்வேறு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2019 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போச்சம்பள்ளியை சேர்ந்த யாரப்பாஷா என்கிற இடைத்தரகர் போச்சம்பள்ளி, பருகூர் போன்ற பகுதிகளில் அரசு வேலை தேடும் 27 இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
தனக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் நட்பு உள்ளதாகவும், அவர்களிடம் பேசி தங்களுக்கு அரசு அலுவலகங்களில் உதவியாளர், டைப்ரைட்டர், போன்ற பல்வேறு அரசு பணி வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 31ல் அப்போது பணியாற்றிய வட்டாச்சியர்கள் வெங்கடேசன், சண்முகம், ரகுகுமார் ஆகிய மூன்று பேர்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனை நம்பிய இளைஞர்கள் அரசு பணியில் சேர வேண்டும் என்கிற எண்ணத்தில் மேற்கண்ட இடைத்தரகர் மூலமாக தாசில்தார்களிடன் ஒவ்வொரு வேலைக்கு ஏற்ப 3 முதல் 8 லட்சம் ரூபாய் வரையில் பணம் வழங்கியுள்ளனர். அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் பணி நியமனம் செய்து தருவதாக, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஒரு கட்டத்தில் மேற்கண்ட இடைத்தரகர் மற்றும் 3 தாசில்தார்கள் இணைந்து போலியாக பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். வேலை கிடைத்து விட்டது என்கிற நம்பிக்கையில் பணியாணை உடன் சென்ற இளைஞர்கள் அப்படி ஒரு பணியிடம் இல்லை என அறிந்ததும் அச்சத்தில் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து மேற்கண்ட 27 இளைஞர்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு தாசில்தார்களிடம் கேட்டபோது அவர்கள் காலம் தாழ்த்தியும் சிலருக்கு காசோலைகளும் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் காசோலைகள் அனைத்தும் வங்கியிலிருந்து பணம் இல்லாமல் திரும்பி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தனித்தனியே கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு 27 நபர்களிடம் இருந்து 78 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, போச்சம்பள்ளியை சேர்ந்த இடைத்தரகர் யார்பாஷா மற்றும் தற்போது ஓசூர் சிப்காட் நில எடுப்பு வட்டாட்சியர் ஆக பணியாற்றி வரும் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணியாற்றும் கூடுதல் ஆட்சியர் ராகு குமார், நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சண்முகம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூடுதல் ஆட்சியர் உட்பட 2 தாசில்தார்கள் ஒரு இடைத்தரகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!