Tamilnadu
ஒரே மாதிரியான உடைகள்.. வியாபாரியிடம் நூதன முறையில் 7 கிலோ நகைகள் கொள்ளை - போலிஸார் தீவிர விசாரணை !
சென்னையை சேர்ந்தவர் மணி. நகை மொத்த வியாபாரியான இவர், சென்னையிலிருந்து தஞ்சையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், இவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்து நகைகடைகளுக்கு நகைகளை கொடுத்துள்ளார்.
பின்னர் இரவு சாப்பிடுவதற்க்காக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். நகைகள் அடங்கிய பையை கீழே வைத்து விட்டு பணம் எடுத்து பில் தொகையை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரை சுற்றி ஒரே நிறத்தில் சீருடை அணிந்த நபர்கள் வந்து நின்றுள்ளனர்.
பணம் செலுத்தி விட்டு தனது பையை எடுக்க முயன்ற நகை வியாபாரி மணிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கீழே வைத்திருந்த நகைப்பையை காணவில்லை. மேலும் அவரை சுற்றி ஒரே நிறத்தில் சீருடை அணிந்து நின்றிருந்தவர்களையும் காணவில்லை. தொடர்ந்து மணி உணவகத்தில் தனது நகைப்பையை தேடி பார்த்துள்ளார். ஆனால் பை கிடைக்கவில்லை. அதில் சுமார் 7 கிலோ நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் வியாபாரி மணி புகார் அளித்ததையடுத்து, மேற்கு காவல்நிலைய போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீருடை அணிந்து நின்றிருந்தவர்கள் நூதன முறையில் மணியிடம் இருந்து நகைப்பையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தஞ்சாவூர் நகர டி.எஸ்.பி கபிலன் ஆய்வாளர் சந்திரா உள்ளிட்டோர் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நகையை பறிகொடுத்தவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது தான் முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும் விசாரணைக்குப் பிறகு என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவரும் எனவும் போலிசார் தெரிவித்தனர்.
விசாரணை முழுமை அடைந்த பிறகுதான் கொள்ளையடிக்கப்பட்டது எவ்வளவு நகை, எத்தனை நபர்கள் வந்தார்கள், இது கொள்ளை சம்பவம்தானா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது குறித்தெல்லாம் தெரிய வரும் எனவும் டி.எஸ்.பி கபிலன் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!