Tamilnadu

"மக்கள் பணியாற்றிடுவோம். கழக அரசுக்கு மகத்தான புகழ் சேர்ப்போம்": உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என கழக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அனைவருக்கும் வணக்கம், திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கழகத்திற்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன். என் தொடர் பணிகள் மீதும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

கழகம்வழங்கிய வாய்ப்பில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணிசட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும், கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து, கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.

கழகத்தை இளைஞர்களிடம்கொண்டுசேர்க்க அடுத்தகட்டதிட்டமிடல்களுடன்பாசறைக்கூட்டங்கள் நடத்துவது, நலத்திட்டபணிகளில் ஈடுபடுவதென பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்.

இந்தச் சூழலில், என்மீதுள்ள அன்பின் காரணமாக, 'எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.

எனவே, பெரியார், அண்ணா , கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம்!மக்கள் பணியாற்றிடுவோம்!கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: கேரளாவை தாக்கிய West Nile வைரஸ்.. தமிழ்நாட்டிற்கு ஆபத்தா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன?