Tamilnadu

உதகை 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.. கண்காட்சியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி ராணுவ வீரர்களின் ராணுவ இசை முழங்க 124வது மலர் கண்காட்சியை உதகை தாவரவியல் பூங்காவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் பல லட்ச வண்ண மலர்களை கண்டு ரசித்தார்.

1 லட்சம் கொய்மலர்களை கொண்டு 80 அடி நீளம் மற்றும் 20 அடி உயரத்திலான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முகப்பகுதியை வடிவமைக்கப்பட்டுள்ளளது.

அதேபோல, 124-வது மலர் கண்காட்சியை குறிக்கும் விதமாக 20 ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 124-பிளவர் ஷோ கேலரி, உதகை நகரம் உருவாகி 200 ஆண்டுகள் ஆவதை நினைவு கூறும் விதமாக 20 ஆயிரம் மலர்கள் மூலம் ஊட்டி 200 வடிவமும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வகை பழங்குடியினரை சுற்றுலா பயணிகள் பார்க்கும் விதமாக 20 ஆயிரம் மலர்களை கொண்டு பழங்குடியின தம்பதியினரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் மஞ்சபை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆயிரம் ரோஜாக்கள் மூலம் மஞ்சப்பை மற்றும் 2 செல்பி ஸ்டேண்ட் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரம் பூக்களை கொண்டு மலர் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆர்க்கிட் மற்றும் லில்லியம் மலர்கள் என 275 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளும் அலங்கார மேடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருகிறது.

Also Read: உதகையில் ... மலைவாழ் மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!