Tamilnadu

பள்ளி மாணவியிடம் தகராறு; தட்டிக்கேட்ட மூதாட்டிக்கு கத்திக்குத்து; கஞ்சா போதையில் வாலிபர் வெறிச்செயல்!

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 26வது சந்தை சேர்ந்தவர் வெள்ளம்மாள் (60).

எதிர் வீட்டில் வசித்து வருபவர் குமார் அம்மாயி தம்பதியினர். இவர்களது மகன் விக்கி (எ) விக்னேஷ். கஞ்சா போதை பழக்கம் உடையவர். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இரு தினங்களாக விக்னேஷ் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (மே 17) இரவு 10 மணியளவில் அதேபோல மாணவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பயந்து போன வீட்டின் உரிமையாளர் கதவை அடைத்துவிட்டார். இருப்பினும் வீட்டின் உரிமையாளரை வெட்டுவதாக கூறி கத்தியை எடுத்துக் கொண்டு விக்னேஷ் தெருவில் ஓடியுள்ளார்.

அந்த வீட்டு உரிமையாளரின் அலறல் சத்தம் கேட்டு வெள்ளம்மாள் வெளியில் வந்து கஞ்சா போதைக்கு அடிமையான விக்னேஷிடம் ’என்னடா கத்தியுடன் திரிகிறாய்’ என கேட்டுள்ளார்.

உடனே அவரது கழுத்து மற்றும் தலையில் தான் வைத்திருந்த கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார் விக்னேஷ். இதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி வெள்ளம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். 

கஞ்சா போதையில் மூதாட்டியை வெட்டி விட்டு தப்பிச் சென்ற விக்னேஷ் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆதம்பாக்கம் போலிஸார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய விக்னேஷை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், நள்ளிரவில் விக்னேஷை கைது செய்த போலிஸார் அவரிடம் நடந்தவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: காதலனுக்காகத் தாயிடமே கைவரிசை.. ஒரு கிலோ தங்க நகையை விற்று 3 கார்களை பரிசளித்த காதலி!