Tamilnadu

“ரயில்வே துறையில் வேலை.. போலி பணி நியமன ஆணை வழங்கி 3 கோடி மோசடி” - போலிஸில் சிக்கியது எப்பது?

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம். ரயில்வேயில் வேலை செய்யாமலேயே, தான் இந்திய ரயில்வேயில் மேலதிகாரியாக பணியாற்றி வருவதாக அப்பகுதி முழுவதும் அறிமுகமாகியுள்ளார். மேலும், அவரது தோழியான அதே பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவருக்கு வேலை வாங்கி தந்ததாகவும், இதுதொடர்பாக அவரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி மற்றவர்களை நம்ப வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசி தனக்கு வேலை வாங்கித் தந்ததாக அவரிடம் விசாரிக்கும் அனைவரிடமும் கூறி வந்துள்ளார். அவரின் பேச்சை நம்பி இருபதுக்கும் மேற்பட்டவர்கள் 10 லட்சத்திற்கும் மேல் பணத்தைக் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு போலியாக பணி ஆணையை வழங்கி 45 நாட்களுக்குப் பிறகு ட்ரெயினிங் அழைப்பார்கள் என்றும் 90 நாட்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அது போலியான அரசாணை என்பதை அறிந்த பின் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த 20க்கும் மேற்பட்டோர் , வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த டிசம்பர் மாதம் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து வள்ளிநாயகம், தமிழரசி, மகேந்திர குமார், முருகன் ஆகிய 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் 4 பேரும் 2 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் வள்ளி நாயகத்தின் வீட்டிற்கு முன்னால் நின்று பணத்தை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவரை சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். இந்திய ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக போலியான பணி நியமன ஆணை கொடுத்து 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.. சினிமா பாணியில் நடந்த விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!