Tamilnadu

மின்சார ரயிலில் சாகச பயணம்.. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த துயரம்.. பயணிகள் கடும் அதிர்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுரான் துறை (19). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காகச் செங்கல்பட்டிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் ஏறி, ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இரும்புலியூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தின் அருகிலிருந்த மின் கம்பியில் ஜேசுரான் துறையின் தலை பலமாக மோதியுள்ளது. இதில் அவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலிஸார் ஜேசுரான் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் கல்லூரிக்குச் சென்ற மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சட்டவிரோதமாக மதுபான பார்.. பாஜக நிர்வாகி மீது புகார் அளித்த ஊர்மக்கள் : ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை!