Tamilnadu

ஊட்டிக்கு ஹெலிகாப்டர் பயணம் - எச்சரித்த வானிலை ஆய்வு மையம் : பயணத்தை ரத்து செய்த வெங்கையா நாயுடு!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக நாளை கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. கடும் குளிரும் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் இரவோடு இரவாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. இதனிடையே வானிலை மையம் மழை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக, விபத்து ஏற்படாத வகையில் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், வெலிங்டன் ராணுவ பயிற்சி அகாடமியில் கலந்து கொள்ள கோவை வந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, விமானப்படை ஹெலிகாப்டரில் ஊட்டி செல்ல இருந்த நிலையில், மோசமான வானிலையால் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் கோவையில் இன்று இரவு தங்கி, நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்வதாக கூறப்படுகிறது. நாளை வானிலையை பொறுத்து பயணம் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

Also Read: “அரசு பேருந்து கட்டண உயர்வு.. தவறான செய்தி பரப்பப்படுகிறது”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்!