Tamilnadu

ஆக்கிரமிப்பு விவகாரம்: உணர்வுப்பூர்வமாக அணுகிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு!

சென்னை ஆக்கிரமிப்பு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கண்வீல்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் வழக்கறிஞர், ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால் பாதிக்கப்பட்டோருக்கு தற்காலிக மாற்று இடம் வழங்குவதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

நிரந்தரமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் குடிநீர், மின்சார வசதி இல்லாமல் இருந்ததால்தான் ஒதுக்கீடு பெற்றவர்கள் அங்கு குடியேறாமல் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாற்று இடம் வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் உத்தரவு 2011ம் ஆண்டு போடப்பட்டுள்ளது. அதன் பிறகும் பல முறை அதனை செயல்படுத்த வேண்டும் என்று பல முறை நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கராராகத் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்பரம்பாக்கம், நாவலூர் ஆகிய இடங்களில் 366 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவிதார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் மாற்று இடத்தை பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மற்றவர்களுக்கும் பெரும்பாக்கம், கண்ணகி நகர், எழில்நகர், நாவலூர் ஆகிய ஒதுக்கப்பட இடங்களில் மாற்று இடம் வழங்க வேண்டும். அங்கு மின்சாரம், குடிநீர் வசதிகள் குறைபாடு இருந்தால் அதனை ஆட்சியர் சரிசெய்து தர வேண்டும்.

முதலமைச்சர் மாற்று இடங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார். உணர்வுப்பூர்வமாக இதனை அணுகி அறிவித்துள்ளார். எனவே, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்ற 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Also Read: இந்தி கட்டாய விவகாரம்: திமுகவின் மாபெரும் போராட்டத்தால் அடிபணிந்த புதுச்சேரி ஜிப்மர்..!