Tamilnadu

ஊழியர்களுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்து HIKE கொடுக்கும் IT நிறுவனம்: உற்சாகத்தில் இளைஞர்கள்

உலகம் முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து 2 ஆண்டுகள் IT நிறுவனங்கள் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்தது. இதனால் பலர் வேலை இழப்பைச் சந்தித்தனர். தற்போது கொஞ்சம், கொஞ்சமாக IT நிறுவனங்கள் மீண்டும் வருகிறது. மேலும் ஆட்களை வேலைக்கும் எடுத்து வருகின்றன.

அண்மையில் கூட தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் Ideas2IT,Kiss Flow ஆகிய நிறுவனங்கள் நீண்ட காலமாக வேலைபார்த்து வருபவர்களுக்கு BMW, Maruti Suzuki கார்களை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் மதுரையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசோல்யூஷன் நிறுவனம், ஊழியர்களுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்து அவர்களுக்கு ஊதியத்துடன் உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பி செல்வகணேஷ், "எங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக வேலை செய்யும் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்று கூறமுடியாது. இந்த முடிவை அவர்கள் எடுக்கும் முன்பே அவர்களுக்கு உரியதை வழங்க வேண்டும் என நினைத்தோம். இதன் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்புகள்.

எங்கள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் பலர் கிராமப்புறத்தில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வரன் கிடைக்காமல் சிரமப்படுவதால் ஊதியத்துடன் உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2006ம் ஆண்டு சிவகாசியில் ஸ்ரீ மூகாம்பிகா இன்ஃபோசோல்யூஷன் நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டு மதுரைக்கு இந்த நிறுவனம் தனது தலைமை இடத்தை மாற்றியது. இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த வருவாயையே இந்நிறுவனம் ஈட்டிவந்தாலும் தங்கள் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவித்துள்ள இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: 100 பேருக்கு 100 Maruti Suzuki கார்.. ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த IT நிறுவனம்!