Tamilnadu
விக்னேஷ் மரணம் : “இதற்கு மேல் பேசி, நான் அரசியலாக்க விரும்பவில்லை” - பேரவையில் முதல்வர் அதிரடி விளக்கம்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் மரணம் மற்றும் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர், விக்னேஷ் மரணம் குறித்தும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் இந்த அரசினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றியிருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் வாகன சோதனையின்போது, கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் வைத்திருந்ததையொட்டி, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணையின் போது, உடல் நலம் குன்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்பது குறித்து ஏற்கெனவே இந்த அவையிலே சிறப்புக் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல; இந்த அவையில் உள்ள கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் இங்கே பேசியிருக்கிறார்கள்.
அப்போது நான் பதிலளித்துப் பேசிய நேரத்தில், ‘விக்னேஷ் இறப்பு குறித்து “சந்தேக மரணம்” என முறைப்படி வழக்குப் பதிவு செய்து, மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேஷினுடைய உடல் 20-4-2022 அன்று மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில், மருத்துவக் குழுவினரால் உடற்கூராய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், இது வீடியோ மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், அன்றைய தினமே உறவினர்களிடம் முறைப்படி விக்னேஷினுடைய உடல் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரத்தை எல்லாம் நான் அன்றைக்குத் தெரிவித்திருந்தேன்.
மேலும், இந்த வழக்கானது, சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க் காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், காவல் துறை இயக்குநர் அவர்கள் மேல் விசாரணைக்காக இவ்வழக்கினை 24-4-2022 அன்று சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்று நான் தெரிவித்திருக்கிறேன்.
தற்பொழுது கிடைத்துள்ள விக்னேஷ் அவர்களின் உடற்கூராய்வு முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில், இன்று இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணையினைத் தொடர்ந்து நடத்திட CB-CID போலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலைய சரகம், உப்பிலிபாளையம் ஓடைக்காடு பகுதியில் துரைசாமி மற்றும் அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் 30-4-2022 அன்று அவர்களது தோட்டத்து வீட்டின் வெளிப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இருவரையும் தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.
இச்சம்பவத்தில், காயமுற்ற துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜெயமணி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோன்று, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், தம்பிரெட்டிப்பாளையத்தில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள், அவர்களுக்குச் சொந்தமான ரெட்டிப்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
அவர்கள் தங்களது வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களைத் தாக்கி கொலை செய்து, வள்ளியம்மாள் அணிந்திருந்த சுமார் ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடந்த விதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட முறை ஒன்றுபோல் இருப்பதால், இந்த இரண்டு சம்பவங்களில் ஒரே குற்றக் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிய வருகிறது. இதுகுறித்து கோயம்புத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தலைமையிலே, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இதுபோன்ற குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரையில், காவல் துறையின் சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டும், ஒருசில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க இயலாத நிலை கடந்த காலங்களிலும் இருந்துள்ளது. இருந்தாலும், இதுகுறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதால், இதற்கு மேல் இதுபற்றிப் பேசி, நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை நிச்சயமாக, விரைவில் எடுக்கப்படும்
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!