Tamilnadu

வெடித்து சிதறிய டயர்; ஒருவர் பலி..11 பேருக்கு படுகாயம்: சிகிச்சை பெறுபவரை பார்க்க சென்றபோது நேர்ந்த கோரம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்ப்பதற்காக அவரின் உறவினர்களான பிருந்தா, பிரகாஷ் உள்ளிட்ட 12 பேர் ஒரு காரில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். கார் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  கே.பெரியபட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்ததாக கூறப்படும் நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் சாலையில் சிறிது தூரம் சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிருந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மண், கற்கள், விபத்துக்குள்ளான காரின் பாகங்கள் சாலையில் கிடந்ததால் மேலும் விபத்து நிகழும் என்ற நிலை இருந்தது. உடனே அங்கு விரைந்த மணப்பாறை போலிஸார் பொதுமக்கள் உதவியுடன் வாகனங்களை நிறுத்தி சாலையில் கிடந்த கல், மண் மற்றும் உடைந்து கிடந்த காரின் பாகங்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து மணப்பாறை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு.. வேலூர் டூ சென்னை - 1.30 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்த இதயம்!