Tamilnadu

“மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. போலிஸார் சோதனை நடத்தியது சட்ட விரோதம் இல்லை” : சென்னை ஐகோர்ட் அதிரடி!

சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேமா ஜூவாலினி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் காவல்துறை தொடர்ந்து புலன் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரர் காவல்துறை மீது தான் குற்றம்சாட்டுகிறாரே தவிர தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் போது உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளதாக வாதிட்ட மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் ஆய்வாளர் சோதனை நடத்தியதில் சட்ட விரோதம் இல்லை என தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி ஹேமா ஜுவாலினி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Also Read: “15 வயது சிறுமி கர்ப்பம்.. தாய்க்கு ஆயுள்.. தந்தைக்கு தூக்கு” : சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!