Tamilnadu

“புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்.. முதலமைச்சர்தான் வேந்தர்”: மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் மா.சு!

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,யுனானி யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்டமுன்வடிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார்.

மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்கப்படும் என கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னைக்கு அருகே இந்த பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தேர்த்திருவிழாவில் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் - தஞ்சை விரைகிறார் முதலமைச்சர்!