Tamilnadu

"ஊசி சிரிஞ்சிற்குள் போதை சாக்லேட்டா?" - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

சென்னை புளியாந்தோப்பு திரு.வி.க நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் ஊசி சிரிஞ்ச் வடிவிலான சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறது. அதில் போதை கலந்து இருப்பதாக வந்த புகாரின் பேரில் புளியாந்தோப்பு காவல் துணை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் சென்னை மண்டல நியமன அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் வண்ணாரப்பேட்டையில் உள்ள மொத்த விற்பனைக் கடை மற்றும் குடோனில் ஆய்வு செய்ததில் தேதி குறிப்பிடாமல் பிஸ்கட், ஜெல்லி ஜூஸ், சாக்லேட் மற்றும் ஊசி சிரிஞ்ச் வடிவிலான சாக்லெட் இருப்பதைக் கண்டறிந்தனர்.

ஊசி சிரிஞ்சுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா என்றும் உணவு பாதுகாப்புதுறை ஆய்வு மேற்கொள்ளபடும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அந்த சாக்லேட்களில் போதைப் பொருள் கலந்திருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 30 பாக்ஸ் பறிமுதல் செய்து அதில் இருந்து மாதிரிகளை எடுத்து அதனை தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கபடும் எனத் தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளுக்கு, ஆபத்தான சாக்லேட்களை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் இ-ஸ்கூட்டர்கள்.. 2,000 வாகனங்களை ரீ-கால் செய்த Pure EV நிறுவனம்!