Tamilnadu

ரூ.4 ஆயிரத்துக்காக கொடூர கொலை.. பார் உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் கைது - நடந்தது என்ன?

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் முத்து (32). இவர் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த முருகன் (34) என்பவருக்கு சொந்தமாக காமநாயக்கன்பாளைத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் டாஸ்மாக் பாரில் ரூ.4 ஆயிரம் திருட்டு போயுள்ளது. இதையடுத்து பார் உரிமையாளர் முருகன் சந்தேகத்தின் பேரில் முத்துவை விசாரித்துள்ளார். அப்போது முத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகனை, பார் ஊழியர் முத்து தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் பாரில் வேலை பார்த்த மற்ற 6 ஊழியர்களுடன் சேர்ந்து முத்துவை முருகனுக்கு சொந்தமாக பல்லடத்தில் உள்ள மதுரை மண்பானை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு முத்துவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மயக்கமடைந்த முத்துவை காரில் வைத்து திண்டுக்கல் கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே முத்து உயிரிழந்தது தெரியவந்த நிலையில், அவரது முகத்தைச் சிதைத்து அம்மயநாயக்கனூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் முத்துவின் உடலை வீசி விட்டு தப்பி சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்மயநாயக்கனூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அம்மயநாயக்கனூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர்.

அப்போது முத்துவின் உடலை கொண்டு வந்து வீசி சென்ற காரின் பதிவு எண் பதிவாகி இருப்பது தெரியவந்தது. அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு முத்துவை கொலை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் முருகன், பாரில் வேலை பார்த்த கோபால், வீராசாமி, மருதுசெல்வம், கார்த்திக், கவின் மற்றும் டென்னீஸ் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

கைதான 7 பேரையும் பல்லடத்தில் சம்பவம் நடந்த மதுரை மண்பானை நாட்டுக்கோழி விருந்து ஓட்டலுக்கு அழைத்து வந்து எவ்வாறு கொலை நடைபெற்றது என விசாரணை செய்தனர்.

ரூ.4,000 ரூபாய் திருட்டுபோன விவகாரத்தில் பார் ஊழியர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “எனக்கு ரெண்டு கையுமே இல்ல.. நான் எப்படி கல்லெறிய முடியும்?” : குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் கண்ணீர்!