Tamilnadu

மனநலம் பாதித்த மகனை வெட்டி கொலை செய்த தாய்... பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு போலிஸ் அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவரது மகன் விஜயராகவன். இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் சரியில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகன் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக புனிதா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அங்கு வந்து விஜயராகவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், விஜயராகவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை யாரோ அரிவாளால் வெட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போலிஸாருக்கு அவரது தாய் புனிதா மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலிஸார் தீவிரமாக நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக விஜயராகவன், தாய் புனிதாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மகனின் தொல்லை தாங்காமல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பிறகு மகன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனநலம் பாதித்த மகனை, தாயே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தாகமா இருக்கு..” - தண்ணீருக்கு பதில் ஆசிட் குடித்த கல்லூரி மாணவர்.. ஆந்திராவில் விபரீதம்: நடந்தது என்ன ?